08/06/2018
நண்பர்களே,
செம்மை நீர்நிறை (இராமநாதபுரம்) செயற்களத்தின் முதன்மைப் பணிகள் துவக்கப்படுகின்றன.
இராமநாதபுரம் நகரைத்தைச் சுற்றிப் பரந்து விரிந்திருக்கும் பழம்பெரும் நீர்நிலை சக்கரக்கோட்டைக் கண்மாய். இராமானுஜ அப்பச் சேரி என்று வழங்கப்பட்ட கண்மாயின் ஒருபகுதி இது. 1950களில் பெருவெள்ளம் பாய்ந்து இரமானுஜ அப்பச்சேரி கண்மாய் அழிந்துபோனது. அதன் மீதமுள்ள பகுதி மட்டும் சக்கரக்கோட்டைக் கண்மாய் என்று வழங்கப்படுகிறது. சக்கரக்கோட்டை என்பது இப்பகுதியிலுள்ள ஊர் ஒன்றின் பெயர்.
சக்கரக்கோட்டைக் கண்மாய் நீர் நிறைந்து இருக்கையில், ஏறத்தாழ 2,500 ஏக்கர் நிலம் பாசனம் பெறும். பல்லாயிரம் மக்களுக்குக் குடிநீர் வழங்கிய கண்மாய் இது. பலகோடிச் சிற்றுயிரிகளும் பல்லாயிரம் பேருயிரிகளும் வாழத்தக்க நீர்நிலை இது. இப்போது இக்கண்மாய் சீமைக் கருவேல மரங்களால் மூடப்பட்டுள்ளது. அரசு நடவடிக்கைகளால் இதன் ஒருபகுதி, சீமைக் கருவேலம் அகற்றப்பட்டுள்ளது.
சக்கரக்கோட்டைக் கண்மாயின் மொத்தப் பரப்பளவு ஏறத்தாழ 2,100 ஏக்கர்.
செம்மை நீர்நிறைச் செயல் திட்டத்தின் வழியாக இக்கண்மாயினை நீர்நிறைப் பகுதியாக மாற்ற விழைகிறோம். இதற்கான ஒப்புதல், ஒத்துழைப்பு ஆகியவற்றை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார். அவருடைய நேர்முக உதவியாளர் (வேளாண் துறை) திரு. இராஜா, இச்செயற் களத்தின் பணிகளைத் துவக்கி வைக்கவுள்ளார்.
வரும் 16 ஆம் நாள் (16/06/18 – சனிக்கிழமை) காலை 10 மணிக்குச் செயற்களப் பணி துவக்கம் நிகழும். நீர்நிறைச் செயல்களில் தொண்டாற்ற விரும்புவோர், வருக. இப்பணிக்கான செலவுகளைப் பகிர்ந்துகொள்ள விழைவோர் தம் பங்களிப்புகளைச் செய்யலாம். விருப்பம் கொண்டோர் தொடர்பு கொள்ளுங்கள். ஏற்கெனவே விருப்பம் தெரிவித்தோருக்கும், மடல் எழுத உள்ளோம். இதுவரை, செயற்களம் முடிவாகாமல் இருந்தது. என்ன பணி என்றே தெரியாமல், பங்களிப்பு நிதி பெறுவதில் மனத்தடை இருந்ததே காரணம். இதையும் மீறி, நான் பங்கேற்ற நிகழ்வுகளில் பலர் பங்களிப்புத் தொகை வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கு நன்றி.
பணியாற்ற, பங்களிக்க முன்வாருங்கள்.
‘பல்லுயிர்ப் பெருக்கத்திற்குப் பணியாற்றுதலே இறைத் தொண்டு’
தொண்டாற்ற வாரீர்!
அன்புடன்,
ம.செந்தமிழன்